பொறுப்புகளை உணர்ந்து கடமையாற்ற வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து


பொறுப்புகளை உணர்ந்து கடமையாற்ற வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
x
தினத்தந்தி 3 May 2021 11:41 AM GMT (Updated: 3 May 2021 11:43 AM GMT)

பொறுப்புகளை உணர்ந்து கடமையாற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.


தேனி:
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போடி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றார். 
இதையடுத்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வாங்குவதற்காக தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் நேற்று அதிகாலையில் வந்தார். அங்கு வெற்றி சான்றிதழை வாங்கிய பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து தமிழ் பெருங்குடி மக்களுக்கும் எங்களுடைய இதயப்பூர்வமான நன்றியை இந்த நல்ல நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம். எங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து, தீர்ப்பினை உணர்ந்து ஜனநாயக கடமைகளை நாங்கள் முறையாக ஆற்றுவதற்கு மக்கள் எங்களை அனுப்பி இருக்கிறார்கள். புதிதாக ஆட்சி பொறுப்பில் அமர இருக்கின்ற, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எங்களுடைய வாழ்த்துகளை இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். எதிர்வரும் காலங்களில் பொறுப்புகளை உணர்ந்து அரசின் கடமைகளை அவர் முறையாக ஆற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”
இவ்வாறு அவர் கூறினார். 


Next Story