வேலூர் மாவட்டத்தில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


வேலூர் மாவட்டத்தில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 3 May 2021 12:54 PM GMT (Updated: 3 May 2021 12:54 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் 3 இடங்களில் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேலூர்

வாக்கு எந்திரங்கள்

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்றுமுன்தினம் நடந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் வேலூர் தந்தைபெரியார் பொறியியல் கல்லூரி, காட்பாடி அரசு சட்டக்கல்லூரி, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 3 மையங்களில் எண்ணப்பட்டது. 

இதில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய தொகுதிகளை தி.மு.க. வென்றது. கே.வி.குப்பம் தொகுதியில் அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் வென்றது.

எந்திரங்களுக்கு பாதுகாப்பு

வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற பின்னர் எந்திரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்குட்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி காட்பாடி தொகுதி எந்திரங்கள் காட்பாடி தாலுகா அலுவலகத்துக்கும், வேலூர் தொகுதி எந்திரங்கள் வேலூர் தாலுகா அலுவலகத்துக்கும், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் குடோனுக்கும் கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் அங்குள்ள பாதுகாப்பு அறைகளில் எந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அந்த அறைகள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 6 மாதங்கள் இந்த எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story