அணைக்கட்டு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் நந்தகுமார் 2-வது முறையாக வெற்றி


அணைக்கட்டு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் நந்தகுமார் 2-வது முறையாக வெற்றி
x
தினத்தந்தி 3 May 2021 3:24 PM GMT (Updated: 3 May 2021 3:24 PM GMT)

அணைக்கட்டு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் 6,360 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வேலூர், 

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஏ.பி.நந்தகுமார் அ.தி.மு.க. சார்பில் ஜி.வேலழகன், அ.ம.மு.க. சார்பில் சதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சுமித்ரா, இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ராஜசேகர் மற்றும் சுயேச்சைகள் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். அணைக்கட்டு தொகுதியில் 77.05 சதவீதம் வாக்குகள் பதிவானது.

351 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட். ஆகியவை வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறையில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தி.மு.க. முன்னிலை

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி 7.50 மணியளவில் அணைக்கட்டு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கட்ராமன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை திறக்கப்பட்டது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் முன்னிலை பெற்று இருந்தார்.

அதைத்தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

6,360 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

17-வது சுற்றின் முடிவில் தி.மு.க. வேட்பாளர் 923 வாக்குகள் தான் அ.தி.மு.க. வேட்பாளரை விட அதிகம் பெற்றிருந்தார். 18-வது மற்றும் அதற்கடுத்த சுற்றுகளில் தி.மு.க. வேட்பாளருக்கு அதிக வாக்குகள் விழுந்தன. அதன் காரணமாக 26-வது சுற்றுகள் மற்றும் தபால் வாக்குகள் முடிவில் தி.மு.க. வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் 6,360 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

மொத்த வாக்குகள்

- 2,53,376

பதிவான வாக்குகள்

- 1,98,393

ெசல்லாதவை - 588

ஏ.பி.நந்தகுமார்

(தி.மு.க.) - 95,159

ஜி.வேலழகன்

(அ.தி.மு.க.) - 88,799

சுமித்ரா

(நாம் தமிழர் கட்சி) - 8,125

சதீஷ்குமார்

(அ.ம.மு.க.) - 1,140

செந்தில்குமார் (சுயே) - 1,357

வெங்கடேசன் (சுயே) - 468

ராஜசேகர் (இந்திய ஜனநாயக கட்சி) - 328

ராஜ்பாபு (சுயே) - 179

மதன்குமார் (சுயே) - 150

கிருபாகரன் (சுயே) - 109

நவீன்குமார் (சுயே) - 94

கருணாமூர்த்தி (சுயே) - 62

அருண் (சுயே) - 44

நோட்டா - 1,791

தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களை தவிர நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என்று 11 பேர் டெபாசிட் இழந்தனர்.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்

இதையடுத்து அணைக்கட்டு தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தி.மு.க. வேட்பாளர் ஏ.பி.நந்தகுமாருக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கட்ராமன் வழங்கினார்.

வாக்கு எண்ணும் பணியை வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோன்று வாக்கு மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆய்வு மேற்கொண்டார். வாக்கு மையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story