கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன


கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன
x

கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தாலுகா அலுவலகங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன.

கடலூர், 

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி ஆகிய 9 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

அதாவது கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதியில் பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள், கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும், பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகத்திலும், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய தொகுதிகளுக்கான எந்திரங்கள் சி.முட்லூர் கலைக்கல்லூரியிலும், விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை

இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, 4 மையங்களில் நேற்று முன்தினம் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இரவு 8 மணியுடன் முடிவடைந்து, வேட்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதையடுத்து தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து, அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது.

அதாவது கடலூர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 412 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 412 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 442 வி.வி.பேட் எந்திரங்களும் கடலூர் பெரியார் அரசு கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து நேற்று மதியம் லாரிகளில் ஏற்றப்பட்டு, கடலூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு தரைதளத்தில் உள்ள ஒரு அறைகளில் அனைத்து எந்திரங்களும் பாதுகாப்பாக வைத்து, பூட்டி சீல் வைக்கப்பட்டது.

45 நாட்கள்

இதேபோல் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கான 404 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்களும், 433 வி.வி.பேட் எந்திரங்களும் குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்திலும், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து திட்டக்குடி தொகுதிக்கான 366 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்களும், 393 வி.வி.பேட் எந்திரங்களும், விருத்தாசலம் தொகுதிக்குரிய 426 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்களும், 458 வி.வி.பேட் எந்திரங்களும், பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து நெய்வேலி தொகுதிக்கான 359 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்களும், 386 வி.வி.பேட் எந்திரங்களும், பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கான 410 வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு எந்திரங்களும், 440 வி.வி.பேட் எந்திரங்களும், சி.முட்லூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்த புவனகிரி தொகுதிக்கான 420 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்களும், 452 வி.வி.பேட் எந்திரங்களும், சிதம்பரம் தொகுதிக்குரிய 425 மின்னணு வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்களும், 457 வி.வி.பேட் எந்திரங்களும், காட்டுமன்னார்கோவில் தொகுதிகளுக்கான 382 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 382 கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் 410 வி.வி.பேட் எந்திரங்களும் அந்தந்த தொகுதிகளுக்கான தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 45 நாட்கள் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும். அதன்பிறகே கடலூர் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு கொண்டு சென்று வைக்கப்பட உள்ளது.

Next Story