திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலு வெற்றி


திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலு வெற்றி
x
தினத்தந்தி 3 May 2021 5:24 PM GMT (Updated: 3 May 2021 5:24 PM GMT)

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலு வெற்றி பெற்றார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்றது. இத்தொகுதியில் தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 15 பேர் போட்டியிட்டனர்.

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 29 சுற்றுகள் எண்ணப்பட்டது. மேலும் 3 மேைஜகளில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 655 தபால் வாக்குகள் எடுத்து கொள்ளப்பட்டது. 130 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் இருந்து இறுதி சுற்று வரை தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு முன்னிலை வகித்து வந்தார்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தபால் வாக்குகள் உள்பட 1 லட்சத்து 37 ஆயிரத்து 665 வாக்குகள் பெற்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வெற்றி பெற்றார். பா.ஜ.க. வேட்பாளர் தணிகைவேல் 43 ஆயிரத்து 399 வாக்குகள் பெற்றார்.

இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை விட 94 ஆயிரத்து 266 வாக்குகள் வித்தியாசத்தில் எ.வ.வேலு வெற்றி பெற்று உள்ளார்.

3-வது முறை

இவர் தொடர்ந்து 3-வது முறையாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

மொத்த வாக்குகள் - 2,84,851

பதிவான வாக்குகள் - 2,05,311

எ.வ.வேலு (தி.மு.க.) - 1,37,655

தணிகைவேல் (பா.ஜ.க.) - 43,399

ஜே.கமலக்கண்ணன் (நாம் தமிழர் கட்சி) - 13,990

ஆர். அருள் (மக்கள் நீதி மய்யம்) - 6,240

ஏ.ஜி.பஞ்சாட்சரம் (அ.ம.மு.க.) - 2,108

ஜே.அக்கினி செல்வராசு (நாடாளும் மக்கள் கட்சி) - 559

கோதண்டபாணி (பகுஜன் சமாஜ் கட்சி) - 481

எஸ்.கே.செல்வம் (வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர்கள் கட்சி) -131

ஆர்.சந்திரகாந்த் பிள்ளை (நியூ ஜெனரேஷன் பிப்புல்ஸ் பார்டி) - 101

ஜே.ஜமில் பாஷா (சுயே) - 780

கே.விநாயகம் (சுயே) - 430

ஆர்.ஜி. வாசுதேவன் (சுயே) - 291

என்.பழனி (சுயே) - 164

டி.மணிமாறன் (சுயே) - 157

ஏ.நக்கீரன் (சுயே) - 146

நோட்டா- 2194

சான்றிதழ்

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தனது வெற்றி சான்றிதழை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சந்தீப்நந்தூரி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றிவேலிடம் பெற்று கொண்டார்.

தொடர்ந்து அவர் கண்ணீர் மல்க பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் தர்மம் வெல்வதற்காக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒராண்டு காலமாக கடந்த ஆட்சியின் அவலங்கள் குறித்து தோளுரித்து காட்டினார். அவருடைய உழைப்புக்காக கிடைத்த வெற்றிதான் இந்த வெற்றி. திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நாங்கள் 6 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். தி.மு.க. எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்பொழுது தான் திருவண்ணாமலை மாவட்டம் பொலிவு பெற்று இருக்கிறது, வளர்ச்சி பெற்றிருக்கிறது. நாங்கள் வெற்றி பெறுவதற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், அதற்காக உழைத்த கழகத் தொண்டர்களுக்கும், தோழமை கட்சியினருக்கும், அதன் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தி.மு.க.வின் சார்பாகவும் வெற்றி பெற்றிருக்கின்ற 6 சட்டமன்ற உறுப்பினர்களின் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் முதல்-அமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பதற்கு வாக்களித்த தமிழக மக்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

Next Story