விழுப்புரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது அ.தி.மு.க. 2, பா.ம.க. ஒரு தொகுதியில் வெற்றி


விழுப்புரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது அ.தி.மு.க. 2, பா.ம.க. ஒரு தொகுதியில் வெற்றி
x
தினத்தந்தி 3 May 2021 5:48 PM GMT (Updated: 3 May 2021 5:48 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு.க.2 இடங்களிலும், பா.ம.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கடந்த 2016-ல் நடந்த சட்டசபை தேர்தலில் செஞ்சி, மயிலம், திண்டிவனம், திருக்கோவிலூர் ஆகிய 4 தொகுதிகளில் தி.மு.க.வும், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர் ஆகிய 3 தொகுதிகளில் அ.தி.மு.க.வும் தங்கள் வசம் வைத்திருந்தன.
இந்நிலையில் 2021-ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதியன்று நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும்  நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.

4 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றியது

இதில் விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, திருக்கோவிலூர் ஆகிய 4 தொகுதிகளில் ஆரம்பத்திலிருந்தே தி.மு.க. வேட்பாளர்களும், அதுபோல் திண்டிவனம், வானூர் ஆகிய 2 தொகுதிகளில் ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர்களும் முன்னிலை பெற்று வந்தனர். மயிலம் தொகுதியில் மட்டும் தி.மு.க., பா.ம.க. இடையே விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை நடந்தது. ஒவ்வொரு சுற்றிலும் 2 வேட்பாளர்களும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தனர்.
இதன் முடிவில் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடினார்கள். அதாவது திருக்கோவிலூர் தொகுதியில் பொன்முடி எம்.எல்.ஏ., செஞ்சி தொகுதியில் மஸ்தான் எம்.எல்.ஏ., விழுப்புரத்தில் டாக்டர் லட்சுமணன், விக்கிரவாண்டியில் புகழேந்தி என 4 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

அ.தி.மு.க.- பா.ம.க.

வானூர் தொகுதியில் சக்கரபாணி எம்.எல்.ஏ., திண்டிவனம் தொகுதியில் அர்ஜூனன் ஆகிய 2 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், மயிலத்தில் அதன் கூட்டணியான பா.ம.க. வேட்பாளர் சிவக்குமாரும் என 3 தொகுதிகளில் மட்டும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றன.
கடந்த 2016 சட்டசபை தேர்தலைப்போன்று தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும் 7 தொகுதிகளில் 4 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றி உள்ளதால் விழுப்புரம் மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக தொடர்ந்து இருந்து வருவதால் அந்த கட்சியின் தொண்டர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Next Story