நாமக்கல் மாவட்டத்தில் ஒருநாள் பாதிப்பு புதிய உச்சம்: 361 பேருக்கு கொரோனா உறுதி


நாமக்கல் மாவட்டத்தில் ஒருநாள் பாதிப்பு புதிய உச்சம்: 361 பேருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 3 May 2021 5:52 PM GMT (Updated: 3 May 2021 5:54 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

361 பேருக்கு கொரோனா

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 549 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 7 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 542 ஆக குறைந்தது.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் முதல் முறையாக புதிய உச்சமாக 361 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,903 ஆக உயர்ந்து உள்ளது.
2,015 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 271 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 763 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 125 பேர் இறந்து விட்ட நிலையில், 2,015 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஒருநாள் பாதிப்பு 250 முதல் 325 வரை மட்டுமே இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ஒருநாள் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் முககவசம் அணியாமல் வெளியே செல்லக்கூடாது எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Next Story