வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு குடோனுக்கு கொண்டு வரப்பட்டன


வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில்  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு குடோனுக்கு கொண்டு வரப்பட்டன
x
தினத்தந்தி 3 May 2021 6:09 PM GMT (Updated: 3 May 2021 6:09 PM GMT)

வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு குடோனுக்கு கொண்டு வரப்பட்டன.

நெல்லை:
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு குடோனுக்கு கொண்டு வரப்பட்டன. 

ஓட்டு எண்ணிக்கை

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடந்தது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை ஆகிய 5 தொகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த 1,924 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு தொகுதி வாரியாக தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன.

இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு, ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த பணி நள்ளிரவை கடந்து நிறைவு பெற்றது.

குடோனுக்கு கொண்டு வரப்பட்டது

வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததை தொடர்ந்து அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும் பாதுகாப்பு குடோனுக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது.

வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு வரிசையாக எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.

அந்த எண்களின் அடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வரிசையாக லாரிகளில் ஏற்றி நெல்லை டவுன் தாலுகா அலுவலகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் குடோனுக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் சரியாக உள்ளதா? என்று சரிபார்க்கப்பட்டது. பின்னர் அந்த அறை மூடப்பட்டது. இந்த பணியை கலெக்டர் விஷ்ணு மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

ஆவணங்கள் 

தேர்தல் பணி முடிவடைந்து விட்டாலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் அழிக்கப்படவில்லை. தேர்தல் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட காலம் வரை பாதுகாக்கப்படும்.

தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பின்னரே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் அழிக்கப்பட்டு, வேறு மாநில தேர்தல் பணிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதேபோல் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட ஆவணங்களும், வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வாகனத்தில் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு குடோனில் வைத்து பூட்டப்பட்டது.

Next Story