அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு


அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 3 May 2021 6:13 PM GMT (Updated: 3 May 2021 6:13 PM GMT)

குமரலிங்கத்தையடுத்த குப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

போடிப்பட்டி
குமரலிங்கத்தையடுத்த குப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது
கிராமப்புறங்களில் சேரும் குப்பைகளை அகற்றுவதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறும் நிலை உள்ளது. ஊராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் போதிய நிதியாதாரங்கள் இல்லாததால் அதனை செயல்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. 
ஒருசில கிராமங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அலட்சியப் போக்கால் ஆங்காங்கே குப்பை மலைபோல் உருவாகி சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் சங்கராமநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட குப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் லாரி லாரியாக குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. 
மேலும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடைக் கால்வாய்கள் வழியாக இந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அருகிலுள்ள மழை நீர் ஓடையில் கலக்கப்படுகிறது. மேலும் சிலர் இந்த பகுதியை திறந்த வெளிக் கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
கொசு உற்பத்தி
மேலும் இந்த பகுதியில் பன்றி, நாய்கள் கூட்டம் எப்போதும் சுற்றி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதுடன் இந்த பகுதி வழியாக அமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் முகம் சுழிக்கும் நிலையும் உள்ளது. மேலும் காற்றில் பறக்கும் பாலிதீன் உள்ளிட்ட கழிவுகள் மழை நீர் ஓடையில் விழுந்து நீரோட்டத்தில் சிக்கலை ஏற்படுத்துவதுடன் கொசு உற்பத்திக்கும் காரணமாகிறது. நீண்ட நாட்களாக பள்ளி அருகில் குப்பைகள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதால் ஆசிரியர்களும் மாணவர்களும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
எனவே பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாவது இந்த பகுதியை சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதிக்கு சில மீட்டர்கள் தொலைவிலேயே பேரூராட்சி அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story