தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் அவதி


தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் அவதி
x
தினத்தந்தி 3 May 2021 7:46 PM GMT (Updated: 3 May 2021 7:46 PM GMT)

மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் அவதிப்படுகின்றனர்.

தாயில்பட்டி, 
மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் அவதிப்படுகின்றனர். 
தீப்பெட்டி தொழிற்சாலை 
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை, முத்தாண்டிபுரம், கீழ செல்லையாபுரம், சிவ சங்குபட்டி, ஊத்துப்பட்டி, இ.எல்.ரெட்டியாபட்டி, செவல்பட்டி, வனமூர்த்தி லிங்கபுரம், தாயில்பட்டி, சத்திரப்பட்டி, கணஞ்சாம்பட்டி, மடத்துப்பட்டி, மண்குண்டாம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்தநிலையில் மூலப்பொருட்களின் கடுமையான விலை உயர்வாலும், ஜி.எஸ்.டி. வரியினாலும் தீப்பெட்டி உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி 
இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை தீப்பெட்டி ஆலை வட்டாரத்தில் கூறியதாவது:- 
வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தீப்பெட்டி தொழிற்சாலையில் கையினால் செய்யப்படும் தீப்பெட்டிக்கும், எந்திரத்தினால் தயார் செய்யப்படும் தீப்பெட்டிக்கும் ஒரே வரி விதிக்கப்பட்டுள்ளது. 
கையினால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிக்கு கடந்த வருடம் 5 சதவீதம் மட்டுமே ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது எந்திரத்தினால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி. வரி 
ஆனால் திடீரென கையினால் தயார் செய்யப்படும் தீப்பெட்டிக்கும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளரின் கூலியை குறைக்க வேண்டிய நிலைமைக்கு பட்டாசு ஆலை உரிமையாளர் தள்ளப்பட்டுள்ளனர்.
தீப்பெட்டி தயாரிப்பதற்கு தேவையான மெழுகு கிலோ ரூ.90 ஆக இருந்தது. ஆனால் தற்போது ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. பேப்பர் ரூ.84 ஆக இருந்தது. தற்போது ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. 
உரிமையாளர்கள் அவதி 
அட்டை ஒரு டன் ரூ.37 ஆயிரமாக இருந்தது. தற்போது ரூ.52 ஆயிரமாக உயர்ந்துள்ளது. குளோரேட் ஒரு டன் ரூ. 74 ஆயிரத்தில் இருந்தது ரூ.84 ஆயிரமாக உயர்ந்தது. 
மேலும் இதனுடன் இணைந்த இதர பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. 
ஆனால் விற்பனையாளர்கள் அதை ஏற்றுக் கொள்ளாததால் தீப்பெட்டி விலையை உயர்த்த முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 
தீப்பெட்டியின் விலை கடந்த சில ஆண்டுகளாக ரூ.1-க்கு விற்பனை செய்யப்படுவதால் தொழிலாளர்களுக்கு சம்பளமும் உயர்த்த முடியவில்லை. உரிமையாளர்களும் தொழிலை வளர்ச்சி அடைய முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறோம். மொத்தத்தில் மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் அவதிப்படுகின்றனர். 

Next Story