அதிராம்பட்டினத்தில் கருவாடு விற்பனை அதிகரிப்பு


அதிராம்பட்டினத்தில் கருவாடு விற்பனை அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 May 2021 7:56 PM GMT (Updated: 3 May 2021 7:56 PM GMT)

தடைக்காலம் எதிரொலியால் மீன்கள் விற்பனை குறைந்துள்ளதால் அதிராம்பட்டினத்தில் கருவாடு விற்பனை அதிகரித்துள்ளது.

அதிராம்பட்டினம்:
தடைக்காலம் எதிரொலியால் மீன்கள் விற்பனை குறைந்துள்ளதால் அதிராம்பட்டினத்தில் கருவாடு விற்பனை அதிகரித்துள்ளது. 
மீன்பிடி தடைக்காலம்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் 2 மாதத்திற்கு மீன்பிடி  தடைக்காலம் அமல்படுத்தப்படும். தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில்  உள்ளது. இதனால் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு செல்லாத காரணத்தால் அதிராம்பட்டினம் மார்க்கெட் பகுதியில் உயர் ரக மீன்களான வஞ்சிரம், காலா, வவ்வா, கொடுவா, சீலா உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் அதிகமாக கிடைக்காது. 
கருவாடு விற்பனை அதிகரிப்பு
இந்தநிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதால் குறைந்த அளவிலான மீன்கள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் மார்க்கெட்டில் தற்போது மீன் விலை அதிகமாக இருக்கும். விலை அதிகமாக இருப்பதால் மீன் சாப்பிடுபவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 
இவ்வாறு ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு ஒரே ஆறுதல் கருவாடுகள் ஆகும். அதிராம்பட்டினத்தில் மீன்களையே வாங்கி சாப்பிடும் தங்களுக்கு  2 மாதத்தி்ற்கு கருவாடுகளை வாங்கி சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. தடைக்காலம் எதிரொலியால் மீன்கள் விற்பனை குறைந்துள்ளதால் கருவாடு விற்பனை அதிகரித்துள்ளது. 
காய வைக்கும் பணி 
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த  கருவாடுகள் மழைநீரில் நனைந்து அழுகியது. 
இதனால்  கருவாடு தொழிலாளர்கள் கவலை அடைந்தனர். 
தற்போது மழையில் நனைந்த கருவாடுகளை தொழிலாளர்கள் வெயிலில் காயவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காளை, தோகை, கத்தாலே, பன்னா, வாவல், திருக்கை ஆகிய கருவாடுகளை கடைகள் மற்றும் சந்தைகளில் தரம் பிரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

Next Story