மீனவர் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம்


மீனவர் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 May 2021 7:57 PM GMT (Updated: 3 May 2021 7:57 PM GMT)

முட்டம் துறைமுகத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து மீனவர் பரிதாபமாக இறந்த சம்பவத்தில் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

ராஜாக்கமங்கலம்:
முட்டம் துறைமுகத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து மீனவர் பரிதாபமாக இறந்த சம்பவத்தில் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

மீனவர் சாவு

குமரி மாவட்டம் முட்டம் ஐஸ்பிளான்ட் தெருவைச் சேர்ந்த ஆல்மான்ஸ் மகன் நிக்சன் (வயது30), திருமணம் ஆகாதவர். மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவர் கடந்த மாதம் 27-ந் தேதி இரவு முட்டம் துறைமுக வணிக வளாக கட்டிடத்தின் மேல் மாடியில் தூங்க சென்றார். மறுநாள் அதிகாலை  மாடியில் இருந்து யாரோ விழுவது போன்ற சத்தம் கேட்டு துறைமுக காவலாளி அங்கு சென்று பார்த்தபோது நிக்சன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. 
இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசுக்கும் நிக்சனின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  நிக்சனின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்பு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

உறவினர்கள் போராட்டம்

இந்தநிலையில் நிக்சனின் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டி வந்தனர். நேற்று காலை உறவினர்கள் அவரது உருவ படத்துடன் முட்டம் துறைமுகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் நிக்சன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
மீன் வியாபாரத்திற்கு வந்த வாகனங்களை போராட்டக்காரர்கள் துறைமுகத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால், மீன் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டன. இந்த போராட்டம் சுமார் 3 மணி நேரம் நீடித்தது.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த குளச்சல் உதவி போலீஸ்சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் முறையான நடவடிக்கை எடுக்கப்படும்,  துறைமுகத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் முட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story