மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் பலி; குழந்தை படுகாயம்
கல்லங்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் பரிதாபமாக இறந்தார். குழந்தை படுகாயம் அடைந்தது.
வி.கைகாட்டி:
மோட்டார் சைக்கிளில் சென்றனர்
பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி சோபனா (வயது 25), மகன் கனிஷ்(2). சோபனா, கனிசுடன் அவர்களது உறவினர் பாண்டியன் என்ற பாண்டியராஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஒரு நிகழ்ச்சிக்காக அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோபிலியன்குடிகாடு கிராமத்திற்கு நேற்று முன்தினம் சென்று, அங்கு பாண்டியனின் அக்காள் வீட்டில் தங்கினர்.
இந்த நிலையில் சோபனா, தனது மகன் கனிசுடன் நேற்று காலை மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல பாண்டியனுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். கோபிலியன்குடிகாடு- அரியலூர் சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்தது.
சாவு
இதில் சோபனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கனிஷ் படுகாயமடைந்தான். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டான். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயர்லாபாத் இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார், சோபனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story