ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவை மீறிய 25 பேர் மீது வழக்கு; 10 வாகனங்கள் பறிமுதல்


ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவை மீறிய 25 பேர் மீது வழக்கு; 10 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 May 2021 9:46 PM GMT (Updated: 3 May 2021 9:46 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவை மீறிய 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவை மீறிய 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இரவு நேர ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
முழு ஊரடங்கின் போது அனாவசியமாக சாலையில் நடமாடினாலோ, வாகனங்களில் சுற்றினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும், வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீசார் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
10 வாகனங்கள் பறிமுதல்
அப்போது அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் சென்ற வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. ஈரோடு மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க், சென்னிமலை ரோடு, காளைமாடு சிலை, மணிக்கூண்டு பஸ் நிலைய பகுதி, கருங்கல்பாளையம் காவிரி கரை சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊரடங்கு உத்தரவையும் மீறி ஒரு சிலர் ரோடுகளில் நடமாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் சிலர் மோட்டார் சைக்கிளில் தேவையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர். நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை மீறிய 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 10-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story