பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 May 2021 9:47 PM GMT (Updated: 3 May 2021 9:47 PM GMT)

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பவானிசாகர்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.
நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்படுவதாலும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 907 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 88.10 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 511 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 88.28 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிக்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீரும், குடிநீருக்காக வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story