புதிய உச்சமாக 652 பேருக்கு தொற்று; கொரோனாவுக்கு வாலிபர் பலி


புதிய உச்சமாக 652 பேருக்கு தொற்று; கொரோனாவுக்கு வாலிபர் பலி
x
தினத்தந்தி 3 May 2021 9:49 PM GMT (Updated: 3 May 2021 9:49 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக 652 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் கொரோனாவுக்கு வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக 652 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் கொரோனாவுக்கு வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார்.
652 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.
தினந்தோறும் 400-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 652 பேருக்கு கொரோனா தெற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 817ஆக உயர்ந்தது.
கொரோனாவுக்கு வாலிபர் பலி
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக கடந்த 1-ந் தேதி சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்தது.
3,419 பேர் சிகிச்சை
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 556 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 19 ஆயிரத்து 231 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று உள்ள 3 ஆயிரத்து 419 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாலும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் ஏற்பட்டு உள்ளது.

Next Story