வாக்கு எண்ணும் மையங்களில் பயன்படுத்திய மின்னணு எந்திரங்கள் தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன


வாக்கு எண்ணும் மையங்களில் பயன்படுத்திய மின்னணு எந்திரங்கள் தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன
x
தினத்தந்தி 3 May 2021 11:18 PM GMT (Updated: 3 May 2021 11:18 PM GMT)

மின்னணு எந்திரங்கள் தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன

சேலம்:
வாக்கு எண்ணும் மையங்களில் பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 280 வாக்குச்சாவடிகளில் 6 ஆயிரத்து 627 வாக்குப்பதிவு எந்திரங்களும், 4 ஆயிரத்து 280 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 4,280 வி.வி.பேட் எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 4 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, அம்மாபேட்டையில் உள்ள கணேஷ் கலை அறிவியல் கல்லூரி, சங்ககிரியில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவனங்கள், தலைவாசலில் மாருதி கல்வி நிறுவனங்கள் ஆகிய 4 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
தாலுகா அலுவலகங்கள்
வாக்கு எண்ணிக்கை முடிவில் சேலம் மேற்கு, சேலம் தெற்கு, எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஏற்காடு, வீரபாண்டி, ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய 10 தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், சேலம் வடக்கு தொகுதியில் தி.மு.க.வும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 11 தொகுதிகளிலும் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
பின்னர் அங்குள்ள பாதுகாப்பு அறையில் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் பயிற்சிக்காக மற்றும் இருப்புக்காக கொண்டு செல்லப்பட்ட 1,535 வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,067 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1,608 வி.வி.பேட் எந்திரங்களும் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில் ஊழியர்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைத்தனர்.
45 நாட்கள்
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும் போது, மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 11 தொகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் உத்தரவுபடி 45 நாட்கள் அங்கேயே வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்காக மற்றும் இருப்புக்காக கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு அறையில் வைக்கப்பட்டுள்ளன என்றனர்.

Next Story