எடப்பாடி தொகுதியில் 36 வாக்குகளே பெற்ற தேர்தல் மன்னன் பத்மராஜன்


எடப்பாடி தொகுதியில் 36 வாக்குகளே பெற்ற தேர்தல் மன்னன் பத்மராஜன்
x
தினத்தந்தி 3 May 2021 11:19 PM GMT (Updated: 3 May 2021 11:19 PM GMT)

எடப்பாடி தொகுதியில் 36 வாக்குகளே பெற்ற தேர்தல் மன்னன் பத்மராஜன்

சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் குஞ்சாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் கே.பத்மராஜன். இவர் டயர் ரீடெயரிங் கடை வைத்துள்ளார். எங்கு எப்போது எந்த தேர்தல் வந்தாலும் இவருக்கு கொண்டாட்டம் தான். அது உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் சரி அனைத்துக்கும் போட்டியிடுவதற்காக ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்வார். இதனால் தான் அவருக்கு தேர்தல் மன்னன் என்ற பெயரும் வந்தது.
இந்த நிலையில் இந்த முறை நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மேட்டூர் தொகுதியிலும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். இதுதவிர கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயனை எதிர்த்து தர்மதம் தொகுதியிலும் போட்டியிட மனுதாக்கல் செய்தார். அவற்றுடன் சேர்த்து அவர் 218 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
கேரளாவில் பத்மராஜனுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாததால் தர்மதம் தொகுதியில் அவருடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மேட்டூர் தொகுதியில் அவர் 325 வாக்குகள் பெற்றுள்ளார்.  எடப்பாடி தொகுதியில் பத்மராஜன் 36 வாக்குகளே பெற்றார். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 1,109 ஓட்டுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை பத்மராஜன் எந்த தேர்தல்களிலும் வெற்றி பெற்றதும் இல்லை, டெபாசிட்டும் பெற்றது இல்லை.

Next Story