59 ஆண்டுகளுக்குப் பின்னர் பொன்னேரி தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ்


59 ஆண்டுகளுக்குப் பின்னர் பொன்னேரி தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ்
x
தினத்தந்தி 4 May 2021 1:10 AM GMT (Updated: 4 May 2021 1:10 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட பொன்னேரி தனி தொகுதியை 59 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கைப்பற்றியது.

பொன்னேரி, 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, மாதவரம், செங்குன்றம், திருவொற்றியூர், ஆவடி, பூந்தமல்லி, மதுரவாயல் உள்ளிட்ட10 சட்டமன்ற தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.

அதிலும் குறிப்பாக பழம்பெரும் தொகுதியான பொன்னேரி தொகுதியில் 1962-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டிபி.ஏழுமலை வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து 1967-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க. 7 முறையும், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1 முறையும், தி.மு.க. 4 முறையும் வெற்றி பெற்றது.

வரலாற்று வெற்றி

அதன் பின்னர், கடந்த 59 ஆண்டுகளாக இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றியை ருசிக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் துரைசந்திரசேகர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் 3-வது முறையாக போட்டியிட்ட பி.பலராமனை விட 9,389 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றியடைந்தார். இதனால் 59 ஆண்டுகளுக்குப் பின்னர், பொன்னேரி தனி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ளது.

Next Story