பகல் நேரத்தில் சாலையை கடந்த சிறுத்தை


பகல் நேரத்தில் சாலையை கடந்த சிறுத்தை
x
தினத்தந்தி 4 May 2021 2:19 PM GMT (Updated: 4 May 2021 2:19 PM GMT)

குன்னூர் வண்டிசோலை பகுதியில் பகல் நேரத்தில் சிறுத்தை சாலையை கடந்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

கோத்தகிரி

குன்னூர் வண்டிசோலை பகுதியில் பகல் நேரத்தில் சிறுத்தை சாலையை கடந்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். 

சிறுத்தை அமர்ந்து இருந்தது 

மலை மாவட்டமான நீலகிரியில் காட்டு யானை, காட்டெருமை, கரடி, சிறுத்தை, மான்கள், வரையாடு, புலி, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. 

இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள், தேயிலைத் தோட்டங்களுக்கு புகுந்து விடுவதுடன், சாலைகளில் நடமாடி வருகின்றன. 

இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இந்தநிலையில் வண்டி சோலையில்  இருந்து குன்னூர் செல்லும் பிரதான சாலையில் தனியார் மகளிர் கல்லூரி அருகே சாலையோரத்தில் ஒரு சிறுத்தை அமர்ந்து இருந்தது. 

சாலையை கடந்தது 

அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அதை பார்த்ததும் பீதியடைந்து வாகனங்களை நிறுத்தினார்கள். சிறிது நேரம் அங்கு அமர்ந்து இருந்த சிறுத்தை, திடீரென்று சாலையை கடந்து மறு புறத்துக்கு பாய்ந்து அங்குள்ள தேயிலை தோட்டத்துக்குள் ஓடி மறைந்தது.

இதை வாகனங்களில் இருந்தவர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்தனர். அத்துடன் சிலர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். 

தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது குறித்து வனத் துறையினர் கூறும்போது, தற்போது நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவை அடிக்கடி சாலையை கடந்து செல்கிறது. எனவே இந்த வழியாக செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும் என்றனர். 


Next Story