தூத்துக்குடியில் மீன்பிடி தடைகாலம் தொடக்கம் படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் மும்முரம்


தூத்துக்குடியில் மீன்பிடி தடைகாலம் தொடக்கம் படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் மும்முரம்
x
தினத்தந்தி 4 May 2021 2:29 PM GMT (Updated: 4 May 2021 2:29 PM GMT)

தூத்துக்குடியில் தடைகாலம் தொடங்கியதால், படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் மும்முரம காட்டி வருகின்றனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளையும் வலைகளையும் சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தடைக்காலம்
தமிழக கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலமாக ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் அதிக அளவில் மீன்கள் பிடிபடுவதால், மீன்வளம் குறைந்து வருவதாகவும் கருதப்பட்டது. இதனால் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகு, இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த மாதம் 15-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அரசு அறிவித்து உள்ளது. இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப்படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 420 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 240 விசைப்படகுகள் உள்ளன.
சீரமைப்பு
இந்த படகுகளில் ஏற்பட்டு உள்ள பழுதுகளை சரி செய்யும் பணிகளில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். 
அதே போன்று மீன்பிடி துறைமுக வளாகத்தில் உள்ள மீன்வலை பின்னும் கூடங்களில் வைத்து மீனவர்கள் சேதம் அடைந்த மீன்வலைகளை மீண்டும் பின்னும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அதே போன்ற தடைக்கால நிவாரணத் தொகையை விரைந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story