திருவண்ணாமலையில் கொரோனா நோயாளிகள் போராட்டம்


திருவண்ணாமலையில் கொரோனா நோயாளிகள் போராட்டம்
x
தினத்தந்தி 4 May 2021 3:07 PM GMT (Updated: 4 May 2021 3:25 PM GMT)

திருவண்ணாமலையில் சிகிச்சைபெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கப்படவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனையில் கோவிட் கேர் சென்டர் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இங்குள்ள கொரோனா நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கப்பட வில்லை என்றும், நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரைகளை முறையாக வழங்குவது கிடையாது என்றும், கழிவறையில் போதுமான தண்ணீர் வசதி இல்லை என்றும், கழிவறை சுத்தம் செய்வது கிடையாது என்றும் கொரோனா தனிமை படுத்தப்பட்ட வார்டில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நோயாளாளிகள் நேற்று முன்தினம் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் நோயாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி குறித்த நேரத்தில் முறையாக உணவு வழங்கப்படும் என்றும், கழிவறைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து ஒருவருடமாகவே அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் இதுவரை ஏற்பட்டது இல்லை. அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு எந்தவித தடையும் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் உணவு வழங்கப்படும் என்றனர்.

Next Story