போக்குவரத்து நெருக்கடியால் வாகன ஓட்டிகள் அவதி


போக்குவரத்து நெருக்கடியால் வாகன ஓட்டிகள் அவதி
x
போக்குவரத்து நெருக்கடியால் வாகன ஓட்டிகள் அவதி
தினத்தந்தி 4 May 2021 3:26 PM GMT (Updated: 4 May 2021 3:26 PM GMT)

போக்குவரத்து நெருக்கடியால் வாகன ஓட்டிகள் அவதி

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து தனியார் மற்றும் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டது. 

கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.33 கோடியே 55 லட்சமும் சாலை விரிவாக்க பணிக்கு ரூ.34 கோடியே 51 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

காந்தி சிலை சிக்னல், பஸ் நிலைய பகுதிகளில் சிக்னல் கம்பங்கள் அகற்றப்பட்டு, ரவுண்டானா அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையில் போக்குவரத்து மிகுந்த நேரங்களில் முக்கிய சாலைகளில் பணிகளை மேற்கொள்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது

பொள்ளாச்சி நகரில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் சரியான திட்டமிடல் இல்லாமல் மேற்கொள்ளப்படுகிறது. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நேரங்களில் முக்கிய சாலைகளில் பணிகளை மேற்கொள்கின்றனர். 

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ரவுண்டானா அமைக்க காந்தி சிலை, பஸ் நிலைய பகுதிகளில் இருந்த சிக்னல் கம்பங்கள் அகற்றப்பட்டன. தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட ரவுண்டானாவை சுற்றி வாகனங்கள் செல்கின்றன. இதனால் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

சில நேரங்களில் கோவை ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சிக்னல் இல்லாததால் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்குள் போலீசார் சிரமப்படுகின்றனர். இரவுநேர ஊரடங்கு அமலில் இருப்பதால் வாகன போக்குவரத்து குறைவாக இருக்கும்.

அப்போது பணிகளை மேற்கொண்டால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாது. எனவே அதிகாரிகள் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story