நாமக்கல் மாவட்டத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு; ஆராய்ச்சி நிலையம் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு; ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 4 May 2021 3:27 PM GMT (Updated: 4 May 2021 3:39 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 2 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 1 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (வியாழக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இல்லை. காற்று இன்றும், நாளையும் மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்தும், நாளைமறுநாள் 5 கி.மீ.வேகத்தில் கிழக்கு திசையில் இருந்தும் வீசும்.

வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 68 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நிலக்கடலையை விதைப்பு செய்யலாம். மேலும் இறைச்சி வாங்க சில்லறை விற்பனை கடைகளுக்கு செல்லும்போது கட்டாயமாக முககவசம் மற்றும் கையுறை அணிந்து செல்ல வேண்டும். இறைச்சியை வீட்டிற்கு கொண்டு வந்தவுடன் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று இறைச்சியின் மூலம் பரவுவது இல்லை என்ற போதிலும், இறைச்சியை நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story