வந்தவாசி அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்க சென்ற பெண் பிணமாக கிடந்தார்.


வந்தவாசி அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்க சென்ற பெண் பிணமாக கிடந்தார்.
x
தினத்தந்தி 4 May 2021 3:39 PM GMT (Updated: 4 May 2021 3:39 PM GMT)

வந்தவாசி அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்க சென்ற பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலைசெய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வந்தவாசி

பணம் கேட்க சென்றார்

வந்தவாசியை அடுத்த தாடிநொளம்பை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி குப்பு (வயது 50). கூலி வேலை செய்து வந்தார். திருமணம் ஆன சில மாதங்களிலே கணவர் இறந்துவிட்டார். இதனால் தனது தாயுடன் வசித்து வந்தார். 

கணவனை இழந்த நிலையில் பக்கத்தில் உள்ள இடையன்தாங்கல் கிராமத்தில் சங்கர் என்பவருடைய நிலத்தில் விவசாய வேலை பார்த்து வந்தார். அப்போது தான் வைத்திருந்த பணத்தை, தனது முதலாளியிடம் கடனாக கொடுத்துள்ளார். அந்தபணத்தை திருப்பி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. 
காயங்களுடன் பிணம்

இந்த நிலையில் சங்கர் இறந்துவிட்டார். இதனால்  அதிர்ச்சியடைந்த குப்பு 4 நாட்களுக்கு முன்பு சங்கரின் மகள், மருமகனிடம் பணத்தைக் கேட்க செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவருடைய தாய் மீனாட்சி கடந்த 3-ந் தேதி வடவணக்கம்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் வல்லம் சித்தேரி ஓடை அருகே ஒரு பெண் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே விரைந்து சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது குப்பு என்பது உறுதிசெய்யப்பட்டது.மேலும் அவருடைய உடலில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று குப்புவின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொலையா?

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்பு கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story