கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்கள் உள்பட 12 பேர் ஒரேநாளில் பலி


கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்கள் உள்பட 12 பேர் ஒரேநாளில் பலி
x
தினத்தந்தி 4 May 2021 3:39 PM GMT (Updated: 4 May 2021 3:39 PM GMT)

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்கள் உள்பட 12 பேர் ஒரேநாளில் பலியாகி உள்ளனர்.

அடுக்கம்பாறை

கொரோனாவுக்கு சிகிச்சை

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. தினமும் 400-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் வேலூர் அரசு மருத்துவமனைகள் நிரம்பி உள்ளது.
 
அறிகுறி தென்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதிக பாதிப்பு தன்மை கொண்டவர்கள் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

12 பேர் பலி

மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் இறந்துள்ளனர். அதில் 5 பேருக்கு தொற்று உள்ளது. மீதம் உள்ள 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டவர்கள். எனினும் அவர்கள் வயது மூப்பு, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினையால் உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர பிற சிகிச்சைகளுக்கான பொது மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கவில்லை.

Next Story