நாமக்கல் உள்பட 5 சட்டசபை தொகுதிகளில் 1,247 தபால் வாக்குகள் செல்லாதவை; ராசிபுரத்தில் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன


நாமக்கல் உள்பட 5 சட்டசபை தொகுதிகளில் 1,247 தபால் வாக்குகள் செல்லாதவை; ராசிபுரத்தில் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன
x
தினத்தந்தி 4 May 2021 3:43 PM GMT (Updated: 4 May 2021 3:52 PM GMT)

நாமக்கல் உள்பட 5 சட்டசபை தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகளில் 1,247 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. ராசிபுரம் தொகுதியில் அனைத்து வாக்குகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

நாமக்கல்,

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கடந்த 2-ந் தேதி நடந்தது. தேர்தலையொட்டி அரசு ஊழியர்கள், 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் அளித்தனர். இதில் நாமக்கல் தொகுதியில் 4 ஆயிரத்து 872 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன. இவற்றில் 188 வாக்குகள் செல்லாத வாக்குகள் என அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.
இதேபோல் சேந்தமங்கலம் தொகுதியில் 2 ஆயிரத்து 210 தபால் வாக்குகள் பதிவாகின. 

இவற்றில் 595 செல்லாத வாக்குகள் நிராகரிக்கப்பட்டது. திருச்செங்கோடு தொகுதியில் 2 ஆயிரத்து 760 தபால் வாக்குகள் பதிவாகின. இதில் 209 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. பரமத்திவேலூர் தொகுதியில் 3 ஆயிரத்து 944 தபால் வாக்குகள் பதிவாகின. இதில் 168 வாக்குகள் செல்லாத வாக்குகளாக நிராகரிக்கப்பட்டன.

குமாரபாளையம் தொகுதியில் 1,374 வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 87 வாக்குகள் செல்லாத வாக்குகளாக நிராகரிக்கப்பட்டன. மொத்தமாக 5 சட்டசபை தொகுதிகளில் 1,247 வாக்குகள் செல்லாத வாக்குகள் என அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டன.

ராசிபுரம் தொகுதியில் மொத்தம் பதிவான தபால் வாக்குகள் 3,251 ஆகும். இந்த தொகுதியில் மட்டும் அனைத்து தபால் வாக்குகளும் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Next Story