வேலை வாங்கித் தருவதாக மோசடி, மும்பையை சேர்ந்த 2 பேர் மீது வழக்கு.
வேலை வாங்கித் தருவதாக மோசடி, மும்பையை சேர்ந்த 2 பேர் மீது வழக்கு
வேலூர்
வேலூர் அருகே உள்ள வள்ளலாரை சேர்ந்தவர் தீபா (வயது 56). இவரது மகன் அக்சயகுமார். இவர், என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களை தொடர்பு கொண்டவர்கள் மும்பையில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தனர்.
இதை நம்பி, தீபா தரப்பினர் 6 தவணைகளாக ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் வரை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பணம் பெற்றுக்கொண்ட அவர்கள் வேலை வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதனையடுத்து தீபா தரப்பினர் பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்கவில்லை. அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தீபா வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாரிடம் புகார் மனு அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த, மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பி வைத்தார். சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி விசாரணை மேற்கொண்டார். பின்னர் மும்பை அந்தேரியை சேர்ந்த ராகேஷ், ஜே.கே.பேனர்ஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story