கடலூரில் கோழிக்கொண்டை பூ விளைச்சல் அமோகம்


கடலூரில் கோழிக்கொண்டை பூ விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 4 May 2021 4:22 PM GMT (Updated: 4 May 2021 4:22 PM GMT)

கடலூரில் கோழிக்கொண்டை பூ அமோக விளைச்சலை கொடுத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர், 

கடலூர் அடுத்த உச்சிமேடு, நாணமேடு உள்ளிட்ட பகுதி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதியில் விளைவிக்கப்படும் சின்ன வெங்காயம் மற்றும் நாணமேடு கத்தரிக்காய் தனிச்சுவை நிறைந்ததாகும். இதனால் இப்பகுதியில் அதிகளவில் சின்னவெங்காயம் மற்றும் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் குறுகிய கால பயிரான சாமந்தி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூ வகை பயிர்களும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

அந்த வகையில் கடந்த மாதம் விவசாயிகள் குறுகிய கால பயிரான கோழிக்கொண்டை சாகுபடி செய்தனர். பின்னர் அவற்றுக்கு உரமிட்டு, களை எடுத்து நன்கு பராமரித்து வந்தனர். தற்போது அவை நன்கு செழித்து வளர்ந்து அமோக விளைச்சலை கொடுத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பூத்து குலுங்கும் கோழிக்கொண்டை பூக்களை ரசிப்பதோடு மட்டுமின்றி, தங்களது செல்போன்களில் புகைப்படமும் எடுத்துச் செல்வதை காண முடிகிறது.

அமோக விளைச்சல்

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், எங்கள் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் சிவப்பு கோழி கொண்டை பூக்கள் சாகுபடி செய்துள்ளோம். நாற்று நடவு செய்து 45 நாட்களில் பூ பூக்க தொடங்கி விடும். கடந்த ஆண்டு அதிகளவில் மழை பெய்ததால், பூ அமோக விளைச்சலை கொடுத்துள்ளது.

கடந்த ஆண்டுகளை காட்டிலும், இந்த ஆண்டு போதிய விளைச்சல் மட்டுமின்றி விலையும் அதிகரித்துள்ளது. கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விவசாயிகளிடம், வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். சில்லரையில் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது என்றார்.

Next Story