அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே விழுப்புரத்தில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது பொதுமக்கள் கடும் அவதி


அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே விழுப்புரத்தில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 4 May 2021 5:07 PM GMT (Updated: 4 May 2021 5:07 PM GMT)

அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே விழுப்புரத்தில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

விழுப்புரம், 

சுட்டெரிக்கும் வெயில்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 2-வது வாரத்தில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து பல மாவட்டங்களில் 100 டிகிரியையும் கடந்து வெயில் சுட்டெரித்தது.
அதேபோல் விழுப்புரத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரித்ததோடு, கடந்த ஒரு மாதமாக வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த வாரம் 100 டிகிரியையும் கடந்து 102 டிகிரியாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெயிலின் கொடுமையால் பெரும்பாலான பொதுமக்கள், வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

100 டிகிரி

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. அக்னி நட்சத்திர தொடக்கத்தின் முதல் நாளிலேயே விழுப்புரத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மதிய வேளையில் வெயில் மிகவும் உக்கிரமாக இருந்தது. இதனால் சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். அதுமட்டுமின்றி சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடைபிடித்தபடியும், முகத்தில் துணிகளை கட்டிக்கொண்டும், பெண்கள் துப்பட்டா மற்றும் புடவையால் தலையில் போர்த்தியபடியும் சென்றதை காண முடிந்தது. நேற்று விழுப்புரத்தில் 100 டிகிரியாக வெயில் பதிவானது.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை காரணமாக நோய் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தை பெரிதாக பொதுமக்கள் உணரவில்லை.

பொதுமக்கள் அவதி

ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமையை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிற நிலையில் அரசு பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகளாலும் மக்கள் நடமாட்டம் சற்று குறைந்து காணப்படுகிறது. அத்தியாவசிய தேவைக்காகவும், பணி நிமித்தமாகவும் வெளியே வரும் இவர்கள், கோடை வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் சாலையோரங்களில் கரும்புச்சாறு, நுங்கு, பழச்சாறு, தர்பூசணி, வெள்ளரிப்பழங்களை விற்பனை செய்ய புதிது, புதிதாக கடைகள் முளைத்துள்ளன. இதனை வாங்கி பருகி பொதுமக்கள், வெயிலின் உஷ்ணத்தில் இருந்து தங்களை தற்காத்து வருகின்றனர். இருந்தபோதிலும் வருகிற 29-ந் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும் என்பதால் இனி                வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே கத்திரி வெயில் காலத்தை எப்படி சமாளிப்பது என்று பொதுமக்கள் விழிபிதுங்கி உள்ளனர்.


Next Story