டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி ஊழியர் பலி


டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி ஊழியர் பலி
x
தினத்தந்தி 4 May 2021 6:27 PM GMT (Updated: 4 May 2021 6:27 PM GMT)

மன்னார்குடியில் கூட்டுறவு பால் சங்கத்தில் டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி ஊழியர் உயிரிழந்தார். தூங்கி கொண்டிருந்தவருக்கு நேர்ந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு

மன்னார்குடி;
மன்னார்குடியில் கூட்டுறவு பால் சங்கத்தில் டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி ஊழியர் உயிரிழந்தார். தூங்கி கொண்டிருந்தவருக்கு நேர்ந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு 
பால் நிரப்பும் பணி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அனுமார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 28). இவர் மன்னார்குடி காந்தி ரோடு அருகில் உள்ள கூட்டுறவு பால் வழங்கும் சங்கத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த சங்கத்திலிருந்து தினமும் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு டேங்கர் லாரி மூலம்  பால் அனுப்பி வைக்கப்படுகிறது. பாலமுருகன் கூட்டுறவு பால் வழங்கும் சங்கத்தில் இரவு நேரத்தில் டேங்கர் லாரியில் பால் நிரப்பும் பணியில் ஈடுபடுவது வழக்கம். சம்பவத்தன்று அதிகாலை பால் ஏற்றுவதற்காக வந்த பாலமுருகன் அங்கிருந்த சிமெண்டு கட்டை மேல் படுத்து தூங்கினார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பாலமுருகன் சிமெண்ட் கட்டையில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
பரிதாப சாவு
இருப்பினும் தூக்கம் களையாததால் பாலமுருகன் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் பால் ஏற்ற வந்த டேங்கர் லாரி பாலமுருகன் மீது ஏறி இறங்கியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய  பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாலமுருகன் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
கைது
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் டேங்கர் லாரியை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம் சித்தேரி பகுதியை சேர்ந்த டிரைவர் ஸ்ரீதரை(54) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story