சட்டக்கல்லூரி மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் போலீஸ் துணை கமிஷனர் தொடங்கி வைத்தார்
சட்டக்கல்லூரி மாணவர்களின் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் துணை கமிஷனர் தொடங்கி வைத்தார்.
நெல்லை:
நெல்லை மாநகரில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதையொட்டி நெல்லை மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நெல்லை அரசு சட்டக்கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
பாளையங்கோட்டை திருச்செந்தூர் ரோட்டில் உள்ள சட்டக்கல்லூரி முன்பு இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது. கல்லூரி முதல்வர் லதா தலைமை தாங்கினார். நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சீனிவாசன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலம் கோர்ட்டு வழியாக சங்கர் காலனியில் முடிவடைந்தது.
அப்போது பொதுமக்கள் கொரோனாவில் இருந்து தப்பிக்க முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வெளியே சென்றால் அடிக்கடி கைகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்து, துண்டு பிரசுரங்களும் வழங்கினர்.
Related Tags :
Next Story