கத்திமுனையில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர்


கத்திமுனையில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர்
x
தினத்தந்தி 4 May 2021 6:49 PM GMT (Updated: 4 May 2021 6:49 PM GMT)

உடுமலையில் வீடுபுகுந்து கத்திமுனையில் மூதாட்டியிடம் நகைகளை பறித்த எம்.பி.ஏ பட்டதாரி வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். நகை பறிப்பை தடுத்த பா.ஜனதா பிரமுகர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார்.

உடுமலை
உடுமலையில் வீடுபுகுந்து கத்திமுனையில் மூதாட்டியிடம் நகைகளை பறித்த எம்.பி.ஏ பட்டதாரி வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். நகை பறிப்பை தடுத்த பா.ஜனதா பிரமுகர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். 
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கட்டிட காண்டிராக்டர் 
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தாராபுரம் சாலை வேலன் நகரைச்சேர்ந்தவர் தண்டபாணி (வயது 77). கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி கஸ்தூரி (71). இந்த நிலையில் தண்டபாணி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக உடுமலை மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் காலையில் சென்றிருந்தார். 
வீட்டில் கஸ்தூரி மற்றும் வேலைக்கார பெண் செல்லம்மாள் (33) ஆகியோர் இருந்தனர். அப்போது வீட்டின் அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் கஸ்தூரி கதவை திறந்து வெளியில் வந்தார். அப்போது வெளியில் நின்றிருந்த வாலிபர் கொரியர் வந்திருப்பதாக கூறியபடி ஒரு தபாலை காண்பித்தார். அத்துடன் தாகமாக உள்ளது தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் கஸ்தூரி தண்ணீர் கொண்டு வருவதற்காக வீட்டிற்குள் சென்றார்.
கத்திமுனையில் நகை பறிப்பு
அப்போது அந்த வாலிபர் கஸ்தூரியின் பின்னாலேயே வீட்டிற்குள் புகுந்து கஸ்தூரியின் கழுத்தில் கத்தியை வைத்து, சத்தம்போடாமல் அணிந்துள்ள நகையை கழற்றி கொடு என்றும், இல்லாவிட்டால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டினார். அதனால் பயந்துபோன கஸ்தூரி, தான் அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல், மோதிரம் ஆகியவற்றை கழற்றி கொடுத்துள்ளார்.
மேலும் வீட்டிற்குள் நின்றிருந்த செல்லம்மாளிடமும் அந்த வாலிபர் நகைகளை கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னிடம் நகை எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். அப்போது திடீரென்று அவர்கள் இருவரும் திருடன், திருடன் என்று சத்தம்போட்டனர். இதனால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடிவந்தனர். இதை அறிந்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்ப முயன்றார்.
பா.ஜ.க. பிரமுகர் மீது தாக்குதல்
சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் குடியிருக்கும், பாரதீய ஜனதா கட்சியைச்சேர்ந்த மாவட்ட பிரசார அணி தலைவர் சின்ராஜ் (61) என்பவர் சிலருடன் சேர்ந்து அந்த வாலிபரை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வாலிபரை பிடிக்க சின்ராஜ் கட்டிபிடித்துள்ளார். அப்போது இருவரும் கீழே விழுந்து கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். 
அப்போது அந்த வாலிபர் இரும்பு கம்பியால் சின்ராஜை தாக்கினார். இதில் சின்ராஜ்க்கு கண்ணுக்கு கீழே காயம் ஏற்பட்டது. உடனே அந்த வாலிபர் தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் அவரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். இதில் சிலர் காயம் அடைந்தனர். பின்னர் பிடிபட்ட வாலிபரிடம் இருந்து பறிக்கப்பட்ட சங்கிலி, மோதிரம், வளையல்கள் என மொத்தம் 7 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. வாலிபர் தாக்கியதில் காயமடைந்த சின்ராஜ் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
எம்.பி.ஏ. பட்டதாரி
நகைகள் பறிப்பு சம்பவம் குறித்து கஸ்தூரி, உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதைதொடர்ந்து உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்த வாலிபரை அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது அந்த வாலிபருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை பொதுமக்களே உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் உதயக்குமார் (33) என்பதும், எம்.பி.ஏ.பட்டதாரியான அவர், கட்டிட காண்டிராக்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

Next Story