கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்ட பெண்


கொடுக்கல் வாங்கல் தகராறில்  கொலை செய்யப்பட்ட பெண்
x
தினத்தந்தி 4 May 2021 6:59 PM GMT (Updated: 4 May 2021 6:59 PM GMT)

வாடிப்பட்டி அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணை கொலை செய்து உடலை வீசிச்சென்ற மைக்செட் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

வாடிப்பட்டி,மே
வாடிப்பட்டி அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணை கொலை செய்து உடலை வீசிச்சென்ற மைக்செட் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
அழுகிய நிலையில் பெண் பிணம்
வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் செம்மினிப்பட்டி மேம்பாலத்தின் அடியில் அணுகு சாலையோரம் 50 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் மற்றும் போலீசார் அங்கு சென்று பிணத்தை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில், அந்தப் பெண்ணின் கழுத்துப் பகுதியில் கயிறு சுற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சுற்றியுள்ள கிராமங்களில் காணாமல் போனவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. 
அடையாளம் தெரிந்தது
இந்த விசாரணையில் அந்தப் பெண் சோழவந்தான் அருகே உள்ள சி.புதூரைச் சேர்ந்த தமிழ்மணி என்பவரது மனைவி தமிழ்செல்வி (31) என்று தெரிய வந்தது. அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரித்தபோது வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த லட்சுமணன் (40) என்ற மைக் செட் தொழிலாளியுடன் அவர் அடிக்கடி பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
அவரை பிடித்து விசாரித்ததில், அவர் தான் தமிழ்செல்வியை கொலை செய்தார் என்பது தெரிய வந்தது.
கொடுக்கல்- வாங்கல் தகராறு
தமிழ்செல்வியின் கணவர் தமிழ்மணி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அப்பள வியாபாரம் செய்து வந்த தமிழ்செல்விக்கும், லட்சுமணனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் வீடு கட்டுவதற்கு லட்சுமணன் ரூ.80 ஆயிரம் வரை கடனாக கொடுத்துள்ளார். பலமுறை கேட்டும் அவர் பணத்தை திருப்பி கொடுக்க வில்லையாம். இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி ஆண்டிபட்டி பங்களா பகுதியில் உள்ள ஓடைப்பகுதியில் வைத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில் ஸ்பீக்கர் பெட்டியை கட்டும் கயிற்றினை எடுத்து கழுத்தில் இறுக்கி தமிழ்செல்வியை கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அவரது உடலை மினி வேன் மூலம் எடுத்து வந்து செம்மினிப்பட்டி பாலத்திற்கு அருகில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 
இதைத் தொடர்ந்து போலீசார் லட்சுமணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story