வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு சாவு


வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு சாவு
x
தினத்தந்தி 4 May 2021 7:12 PM GMT (Updated: 4 May 2021 7:12 PM GMT)

திருக்காட்டுப்பள்ளி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு இறந்தார். இதற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருக்காட்டுப்பள்ளி:
 திருக்காட்டுப்பள்ளி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு இறந்தார். இதற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 
தூக்குப்போட்டு பெண் சாவு 
தஞ்ைச மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை அடுத்த வேலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகள் புவனேஸ்வரிக்கும் (வயது25), ஆற்காடு கிராமத்தை சேர்ந்த ரெங்கராஜ் (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 26-ந்தேதி திருமணம் நடைபெற்றது. 
திருமணம் ஆன சில மாதங்களிலேயே மாமியார் வீட்டில் தகராறு ஏற்பட்டதால் கணவன்-மனைவி இருவரும்  திருக்காட்டுப்பள்ளி காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள நடுச்சந்தில் தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் புவனேஸ்வரி தூக்குப்போட்டு இறந்துவிட்டதாக அவரது தந்தை கல்யாணசுந்தரத்திற்கு தகவல் வந்தது. தகவல் அறிந்ததும் அவர் சம்பவ இடத்திற்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். 
சாவில் சந்தேகம்
இதுகுறித்து கல்யாணசுந்தரம் திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரில் தனது மகள் புவனேஸ்வரியை கணவர் ரெங்கராஜ், அவருடைய தாய் சுமதி, தந்தை கலியமூர்த்தி ஆகிய மூவரும் வரதட்சணை  கேட்டு கொடுமை படுத்தியதாகவும், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புவனேஸ்வரிக்கு திருமணமாகி 1 ஆண்டே ஆவதால் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி விசாரணை நடத்தி வருகிறார். 
சாலைமறியல்
இந்தநிலையில் புவனேஸ்வரியின் சாவுக்கு காரணமானவர்களை உடனே கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) சபியுல்லா, திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இந்தநிலையில்  திருக்காட்டுப்பள்ளி போலீசார் தலைமறைவாக இருந்த ரெங்கராஜை பிடித்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.  
முன்னதாக புவனேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story