திருவேங்கடம் அருகே மரத்தில் கார் மோதி புதுமாப்பிள்ளை பலி 3 பேர் படுகாயம்


திருவேங்கடம் அருகே  மரத்தில் கார் மோதி புதுமாப்பிள்ளை பலி  3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 May 2021 7:18 PM GMT (Updated: 4 May 2021 7:18 PM GMT)

திருவேங்கடம் அருகே மரத்தில் கார் மோதி புதுமாப்பிள்ளை பரிதாபமாக பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே மரத்தில் கார் மோதி புதுமாப்பிள்ளை பரிதாபமாக பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மரத்தில் கார் மோதல்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் சின்னகாளாம்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 55). விவசாயியான இவர் சம்பவத்தன்று திருவேங்கடம் சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
திருவேங்கடம் அருகே உள்ள வெள்ளாகுளம் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, அந்த வழியாக வந்த கார் கனகராஜ் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும் தாறுமாறாக ஓடிய கார் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது.

இதில் காரில் வந்த வெள்ளாகுளம் இந்திரா காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கனகராஜ் (27), மணிகண்டன் (25), மகேஷ்குமார் (25) ஆகியோர் காயம் அடைந்தனர்.

புது மாப்பிள்ளை பலி

இதுகுறித்து உடனடியாக திருவேங்கடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து மகேஷ்குமார் மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான மகேஷ்குமாருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

பரிதாபம்

இந்த சம்பவம் குறித்து திருவேங்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருவேங்கடம் அருகே மரத்தில் கார் மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story