கனமழையுடன் தொடங்கிய அக்னி நட்சத்திரம்


கனமழையுடன் தொடங்கிய அக்னி நட்சத்திரம்
x
தினத்தந்தி 4 May 2021 8:53 PM GMT (Updated: 4 May 2021 8:53 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் கனமழையுடன் தொடங்கியதால், வெப்பம் குறைந்து இதமான குளிர் நிலவியது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. 

அதன்பின்னர் மழை பெய்த சுவடே தெரியாத அளவுக்கு கடுமையான வெயில் கொளுத்த தொடங்கியது. 

அதிலும் கோடைகாலம் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. 

ஒருசில நாட்களில் 100 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது.


நேற்றும் வழக்கம் போல் காலை முதல் மதியம் வரை வெயில் கொளுத்தியது.

 சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாக இருந்தது. 

அதிகபட்சமாக 98.6 டிகிரி வெயில் பதிவானது. ஆனால், மாலையில் வானில் மேக கூட்டங்கள் திரண்டதால் வெயில் குறைந்தது. அதோடு லேசான சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது.


இதைத் தொடர்ந்து மாலை 6.40 மணிக்கு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. 

இந்த மழை சிறிது நேரத்தில் இடிமின்னலுடன் சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்தது. 

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன்பின்னரும் அவ்வப்போது சாரல் மழை பெய்தபடி இருந்தது. 

இதனால் அக்னி நட்சத்திர வெயிலின் வெப்பம் குறைந்து, இதமான குளிர் நிலவியது.

மேலும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளில் மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

இதற்கிடையே மழை பெய்ததை தொடர்ந்து திண்டுக்கல்லில் மின்தடை ஏற்பட்டது. இரவு 8 மணி வரை மின்சாரம் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் இருளில் தவித்தனர். 

இதேபோல் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது. 


சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய பெய்த மழையால் சாலைகளில் நீர்பெருக்கெடுத்து ஓடியது. 
 

Next Story