கோவையில் மழையுடன் அக்னி நட்சத்திரம் தொடங்கியது


கோவையில் மழையுடன் அக்னி நட்சத்திரம் தொடங்கியது
x
தினத்தந்தி 4 May 2021 9:48 PM GMT (Updated: 4 May 2021 9:48 PM GMT)

கோவையில் நேற்று மழையுடன் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது.

கோவை

கோவையில் நேற்று மழையுடன் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது.

அக்னி நட்சத்திரம்

ஒவ்வொரு ஆண்டும் சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் நுழையும் காலத்தை அக்னி நட்சத்திரம் என்று வானியல் கணக்கின்படி கூறுகிறார்கள். இந்த ஆண்டு கத்திரி வெயில் நேற்று தொடங்கி வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

கத்திரி வெயிலின் முதல் நாளான நேற்று கோவையில் வெயிலுக்கு பதிலாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இதமான சூழலால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்த நிலையில் நேற்று மதியம் மற்றும் இரவு 7 மணியளவில் திடீரென்று ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம், சுந்தராபுரம், போத்தனூர், இடையர்பாளையம், சிங்காநல்லூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாரல்மழை பெய்தது.  குளிர்ந்த காற்று வீசியது. கோவையில் (நேற்று) 91 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை இருந்தது. 

இது குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:- மே மாதத்தில் 25 நாட்களுக்கு கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். இந்த காலகட்டத்தில் வெப்பநிலை அதிகபட்சம் 99.5 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவுக்கு செல்லும். 

இந்த கோடை வெயில் 10 ஆண் டுகளின் சராசரி கணக்கிடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 1991-ம் ஆண்டு 2000-ம் ஆண்டு வரை கோடை காலத்தில் ஒரு நாள் முதல் அதிகபட்சம் 5 நாட்கள் வரை மழை பெய்து உள்ளது.

மழைக்கு வாய்ப்பு

1995-ம் ஆண்டு அதிகபட்சம் கத்திரி வெயில் காலத்தில் 5 நாட்களில் 102 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்து உள்ளது. 2011-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 2018-ம் ஆண்டு அதிக பட்சம் 11 நாட்களில் 237 மி.மீ. மழை பெய்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story