பூண்டி ஏரியில் நீர்மட்டம் குறைந்தது: கிருஷ்ணா நதிநீரை திறக்க ஆந்திர அதிகாரிகள் முடிவு


பூண்டி ஏரியில் நீர்மட்டம் குறைந்தது: கிருஷ்ணா நதிநீரை திறக்க ஆந்திர அதிகாரிகள் முடிவு
x
தினத்தந்தி 5 May 2021 2:22 AM GMT (Updated: 5 May 2021 2:22 AM GMT)

கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

ஊத்துக்கோட்டை, 

சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. இங்கு சேமித்து வைக்கப்படும் கிருஷ்ணா தண்ணீர் தேவைப்படும் போது சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந்தேதி நிறுத்தப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் 8.060 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு கிடைத்தது.

கடந்த ஆண்டு பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக பூண்டி ஏரி முழுவதும் நிரம்பியதையடுத்து கிருஷ்ணா தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறக்க வேண்டாம் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி கேட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது கோடை வெயில் காரணமாகவும்பூண்டி ஏரி நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இந்த ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 200 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 183 கனஅடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 9 கனஅடி தண்ணீரும் திறக்கப்படுகிறது. தற்போது கோடை காலத்தில் சென்னை குடிநீருக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படுவதால் தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில்,இந்த மாத கடைசியில் கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் என்று ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story