ஜொ்மன், இங்கிலாந்து நாடுகளில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் ஆக்சிஜன் சேமிப்பு சிலிண்டர்கள் சென்னை வந்தடைந்தன


ஜொ்மன், இங்கிலாந்து நாடுகளில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் ஆக்சிஜன் சேமிப்பு சிலிண்டர்கள் சென்னை வந்தடைந்தன
x
தினத்தந்தி 5 May 2021 3:58 AM GMT (Updated: 5 May 2021 3:58 AM GMT)

ஜொ்மன், இங்கிலாந்து நாடுகளில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் ஆக்சிஜன் சேமிப்பு சிலிண்டர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஆலந்தூர், 

இந்தியா முழுவதும் கொரோனா 2-ம் அலை பரவல் மோசமான நிலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் பலா் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனா். இதனால் நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

எனவே ஆக்சிஜன் உற்பத்தியை நாடு முழுவதும் அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதையடுத்து தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டொ்லைட் ஆலையை 3 மாதங்களுக்கு மட்டும் திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல் நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் கூடுதலாக உற்பத்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை சேமித்து வைக்க சிலிண்டா்களுக்கும் இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்து கொண்ட வெளிநாடுகள் ஆக்சிஜன் சேமித்து வைப்பதற்கான கன்டெய்னா்கள், ஆக்சிஜன் சிலிண்டா்களை இந்தியாவிற்கு கொடுத்து உதவ முன்வந்துள்ளது. அதைத்தொடர்ந்து, இந்திய விமானப்படையின் சரக்கு விமானமான சி-17 ரக விமானத்தில் ஜொ்மனிலிருந்து 4 கிரயோஜெனிக் ஆக்சிஜன் கன்டெய்னா்களும், பிரிட்டனில் உள்ள பிரைஸ் நாா்டன் நகரில் இருந்து 900 ஆக்சிஜன் சிலிண்டா்களையும் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு நேற்று வந்தது.

இவை திருவள்ளூருக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அங்கிருந்து ஆக்சிஜன் சிலிண்டா்கள் தட்டுப்பாடு உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story