ஈரோட்டில் மூதாட்டியை கொலை செய்த வாலிபர் கைது- நகைக்காக கொன்றதாக வாக்குமூலம்


ஈரோட்டில் மூதாட்டியை கொலை செய்த வாலிபர் கைது- நகைக்காக கொன்றதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 5 May 2021 9:22 PM GMT (Updated: 5 May 2021 9:22 PM GMT)

ஈரோட்டில் மூதாட்டியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நகைக்காக கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஈரோடு
ஈரோட்டில் மூதாட்டியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நகைக்காக கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மூதாட்டி கொலை
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 62). இவருடைய கணவர் பழனிசாமி மற்றும் மகன் ரவி ஆகியோர் இறந்து விட்டனர். மகள் ராணி திருமணமாகி ஈரோடு ஈ.பி.பி. நகரில் கணவருடன் வசித்து வருகிறார். மணிமேகலை தனது தங்கையுடன் வசித்து வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவரது தங்கை எல்லப்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மணிமேகலை மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று முன்தினம் ராணி தன்னுடைய தாயை பார்ப்பதற்காக அவருடைய வீட்டுக்கு சென்றார். அப்போது தாய் மணிமேகலை கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
தனிப்படை அமைப்பு
இதைத்தொடர்ந்து அவர் இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிமேகலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், பாலமுருகன், பாண்டியம்மாள் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர், மணிமேகலையின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றவரும், அவருடைய காருக்கு அவ்வப்போது டிரைவராக பணியாற்றி வந்தவருமான ஈரோடு வாய்க்கால் மேடு வள்ளியம்மை வீதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் பிரபு (28) என்பவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது
அப்போது அவர் மணிமேகலையை கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
நான் மணிமேகலையின் தூரத்து உறவினர் என்பதால் அவர் என்னை கார் ஓட்டுவதற்காக அழைப்பார். இதன் காரணமாக நான் அவருடைய வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தேன். தற்போது வேலை சரியாக இல்லாததாலும், குடிக்க பணம் தேவைப்பட்டதாலும் நகைக்காக மணிமேகலையை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி நேற்று மாலை (அதாவது நேற்று முன்தினம்) அவருடைய வீட்டுக்கு சென்ற நான் அங்கிருந்த கத்தியால் மணிமேகலையின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டேன். நான் மணிமேகலை வீட்டுக்கு செல்லும்போது பாட்டிலில் தண்ணீர் கொண்டு சென்று அவர் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் குடிப்பது வழக்கம். அதேபோல் அன்று நான் கொண்டு சென்ற குடிநீர் பாட்டிலை குளிர்சாதன பெட்டியிலேயே வைத்துவிட்டு வந்ததால் போலீசாரிடம் மாட்டிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து போலீசார் பிரபுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 பவுன் நகை மீட்கப்பட்டது.

Related Tags :
Next Story