புதுச்சேரியில் வேகமாக பரவும் தொற்று; ஒரேநாளில் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு; 18 பேர் பலியான பரிதாபம்


புதுச்சேரியில் வேகமாக பரவும் தொற்று; ஒரேநாளில் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு; 18 பேர் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 6 May 2021 5:45 AM GMT (Updated: 6 May 2021 5:45 AM GMT)

புதுவையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 18 பேர் பலியானார்கள். 1,819 பேர் பாதிக்கப்பட்டனர்.

தொற்று வேகம்

புதுவையில் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 10-ஐ தாண்டியே இருந்து வருகிறது. இதனால் மக்கள் செய்வதறியாமல் அச்சத்தில் உறைந்துள்ளனர்.நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,819 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 933 பேர் குணமடைந்துள்ளனர்.

பலியானவர்கள் விவரம்

அதேநேரத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 883 ஆக உயர்ந்துள்ளது.அதாவது தனியார் ஆஸ்பத்திரிகளில் லாஸ்பேட்டை பாரதி நகரை சேர்ந்த 55 வயது பெண்ணும், கந்தன்பேட்டை சேர்ந்த 85 வயது மூதாட்டியும், மணக்குள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த 56 வயது ஆண், கொம்பாக்கத்தை சேர்ந்த 46 வயது பெண், சேலியமேட்டை சேர்ந்த 80 வயது மூதாட்டி, அன்னை தெரசா நகரை சேர்ந்த 72 வயது முதியவர் கொரோனாவுக்கு பலியானர்கள்.

கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பூமியான்பேட்டையை சேர்ந்த 38 வயது ஆண், முத்தியால்பேட்டை வெள்ளாளர் வீதியை சேர்ந்த 48 வயது ஆண், கதிர்காமம் வழுதாவூர் ரோட்டை சேர்ந்த 80 வயது முதியவர், சொக்கம்பட்டை சேர்ந்த 60 வயது மூதாட்டி, ஒட்டம்பாளையத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி, பாரதி வீதியை சேர்ந்த 60 வயது முதியவர், ஒயிட் டவுண் பெல்கோல் வீதியை சேர்ந்த 45 வயது ஆண், முத்தியால்பேட்டை வண்டிக்கார வீதியை சேர்ந்த 58 வயது ஆண், முதலியார்பேட்டை அனிதா நகரை சேர்ந்த 45 வயது பெண், ஜிப்மரில் அண்ணா நகரை சேர்ந்த 76 வயது முதியவர், குமரன் நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த 77 வயது மூதாட்டி, ஏனாமில் 64 வயது முதியவர் பலியாகி உள்ளனர்.

தடுப்பூசி

மாநிலத்தில் இதுவரை 65 ஆயிரத்து 117 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,972 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 9 ஆயிரத்து 745 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது 11 ஆயிரத்து 717 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 52 ஆயிரத்து 517 பேர் குணமடைந்துள்ளனர்.

புதுவையில் உயிரிழப்பு 1.36 சதவீதமாகவும், குணமடைவது 80.65 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 82 பேரும், முன்கள பணியாளர்கள் 64 பேரும், பொதுமக்கள் 426 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 99 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story