கடைகள், வணிக நிறுவனங்கள் இன்று முதல் முழுமையாக மூடப்படும் - ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்


கடைகள், வணிக நிறுவனங்கள் இன்று முதல் முழுமையாக மூடப்படும் - ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 6 May 2021 10:30 AM GMT (Updated: 6 May 2021 10:30 AM GMT)

தஞ்சையில் வணிக கடைகள் வணிக நிறுவனங்கள் இன்று முதல் முழுமையாக மூடப்படும். மளிகை கடைகள் காய்கறி கடைகள் ஓட்டல்கள் தேநீர் கடைகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என வணிகர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் கூறினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சை மாநகரில் உள்ள வணிகர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், தேனீர் கடைக்காரர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய்க்கோட்டாட்சியர் வேலுமணி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று (வியாழக்கிழமை) முதல் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி இன்று முதல் பால் மருந்து கடைகளுக்கு எந்த தடையும் இல்லை. மளிகைக் கடைகள் மற்றும் காய்கறி கடைகள் மதியம் 12 மணிவரை திறந்திருக்க வேண்டும். தேநீர் கடைகள் மதியம் 12 மணி வரையும், ஓட்டல்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும். தேனீர் மற்றும் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. பார்சல்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

மீன், ஆடு. கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மதியம் 12 மணி வரை செயல்படும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக மூடப்படும். வணிக கடைகள், வணிக நிறுவனங்கள் முழுமையாக மூடப்படும். சினிமா தியேட்டர், கலாசார செயல்பாடு, பொழுதுபோக்கு நடவடிக்கைகள், விளையாட்டு, திருவிழாக்கள் போன்றவற்றுக்கு அனுமதியில்லை.

வாடிக்கையாளர்கள் கடைகளுக்குள் நுழைய அனுமதி இல்லை. கடைகளில் குளிர்சாதன வசதி அனுமதிக்கப்படவில்லை.

திருமணங்களுக்கு வருபவர்கள், 50 பேருக்கு மிகாமலும். இறுதிச் சடங்குகளுக்கு வருபவர்கள் 20 பேருக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இது தொடர்பாக அவ்வப்போது வழங்கப்படும் வேறு வழிகாட்டுதல்களும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

முகக்கவசங்கள் அணிவது, சமூகவிலகல் மற்றும் கிருமிநாசினி கொண்டு கை கழுவுதல், சுற்றுபகுதியை தூய்மைபடுத்திக்கொள்ளுதல் போன்ற மற்ற அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் மிகக்கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். இது தொடர்பாக ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை மீறுவது தண்டனை நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி மாவட்ட நிர்வாகிகள் திலகர், முருகேசன், வாசுதேவன், கந்த முருகன், ‌ வணிகர் சங்க பேரமைப்பு ரவி, தேனீர் கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயபால், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி சுப்ரமணிய சர்மா மற்றும் பல்வேறு சங்கங்களின் சேர்ந்த உரிமையாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story