நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் சாவு;பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு


நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் சாவு;பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு
x
தினத்தந்தி 6 May 2021 7:19 PM GMT (Updated: 6 May 2021 7:27 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலியான நபர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்து உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் தொடக்கத்தில் இறப்பு ஏற்படவில்லை என்றாலும், கடந்த சில நாட்களாக பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 126 பேர் இறந்து இருந்தனர்.
இந்த நிலையில் மல்லசமுத்திரம் அருகே உள்ள புதுப்பாவடியை சேர்ந்த 70 வயது முதியவர் சளி, காய்ச்சல் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா இருப்பது உறுதியானது. இதன் தொடர்ச்சியாக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

130 பேர் சாவு

இதேபோல் திருச்செங்கோடு வேட்டையன்புதூரை சேர்ந்த 55 வயது பெண், ராசிபுரம் சந்திரசேகரபுரத்தை சேர்ந்த 54 வயது ஆண் ஆகியோர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர். மேலும் நாமக்கல் முதலைப்பட்டிபுதூரை சேர்ந்த 78 வயது முதியவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவரும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இதனால் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்து உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story