ஊஞ்சலூர் அருகே பயங்கரம்: மதுபோதை தகராறில் டிரைவர் அடித்து கொலை- நண்பர் கைது


ஊஞ்சலூர் அருகே பயங்கரம்: மதுபோதை தகராறில் டிரைவர் அடித்து கொலை- நண்பர் கைது
x
தினத்தந்தி 6 May 2021 11:11 PM GMT (Updated: 6 May 2021 11:11 PM GMT)

ஊஞ்சலூர் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் டிரைவரை அடித்துக்கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர்.

ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் டிரைவரை அடித்துக்கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுபோதையில் தகராறு
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் கருப்பணசாமி கோவில் வீதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது32). ஊஞ்சலூர் அருகே உள்ள பனப்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர். மணிகண்டன், பாண்டியனுடன் வாடகைக்கு கார் ஓட்டும் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று 2 பேரும் ஊஞ்சலூர் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்தனர். பின்னர் கூடுதலாக சில மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு பனப்பாளையத்தில் உள்ள மணிகண்டன் வீட்டுக்கு சென்று குடித்துள்ளனர். அப்போது மதுபோதையில் பாண்டியன் புகையிலையை வாயில் மென்று எச்சிலை மணிகண்டன் வீட்டின் முன்பு துப்பியதாக கூறப்படுகிறது. இதை மணிகண்டன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
அடித்துக்கொலை
இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அருகே கிடந்த இரும்பு குழாயை எடுத்து பாண்டியனை அடித்துள்ளார். இதில் பாண்டியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் என்ன பிரச்சினை என்று விசாரித்து உள்ளார்கள். இதனால் மணிகண்டன் தனது கையில் இருந்த குழாயை கீழே போட்டு உள்ளார். உடனே அதே குழாயை பாண்டியன் எடுத்து மணிகண்டனை திரும்ப தாக்கினார். இதில் அவரும் படுகாயம் அடைந்தார்.
படுகாயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் மணிகண்டன் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் நேற்று இறந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர். பின்னர் பாண்டியன் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுபோதை தகராறில் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story