ஓசூரில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை ஐ.டி. நிறுவன மேலாளர் கைது; 9 பாட்டில் மருந்து பறிமுதல்


ஓசூரில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை ஐ.டி. நிறுவன மேலாளர் கைது; 9 பாட்டில் மருந்து பறிமுதல்
x
தினத்தந்தி 7 May 2021 6:19 PM GMT (Updated: 7 May 2021 6:21 PM GMT)

ஓசூரில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த ஐ.டி. நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 பாட்டில் மருந்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஓசூர்,

ஓசூரில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த ஐ.டி. நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 பாட்டில் மருந்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளது. இதன் அருகில் நேற்று கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரு நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. 

அந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து 9 பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காரில் வந்த நபரை போலீசார் பிடித்து ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஐ.டி. நிறுவன மேலாளர் கைது

இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பேகூர் சாலையில் உள்ள ஏலெனஹள்ளி நிரஞ்சன் ஜெனிசிஸ் அபார்ட்மெண்டை சேர்ந்த ஆனந்த் பாலாஜி (வயது 36) என்பதும், பெங்களூருவில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.
மேலும் வங்காளதேசத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரெம்டெசிவிர் மருந்தை, கர்நாடகாவிற்கு வாங்கி சென்றதும், தேவைப்படும் நபர்கள் போன் செய்தால் ஓசூருக்கு வந்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது. மேலும் கள்ளச்சந்தை மூலமாக ஒரு பாட்டில் மருந்து ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து ஆனந்த் பாலாஜியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கார், 9 மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story