கோபி அருகே பயங்கரம் தொழிலாளி கட்டையால் அடித்துக்கொலை; விவசாயிக்கு போலீஸ் வலைவீச்சு


கோபி அருகே பயங்கரம் தொழிலாளி கட்டையால் அடித்துக்கொலை; விவசாயிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 May 2021 11:31 PM GMT (Updated: 7 May 2021 11:31 PM GMT)

கோபி அருகே கூலித்தொழிலாளியை கட்டையால் அடித்துக்கொலை செய்த விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடத்தூர்
கோபி அருகே கூலித்தொழிலாளியை கட்டையால் அடித்துக்கொலை செய்த விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுபோதையில்...
கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்த வேலுச்சாமி அந்த பகுதியில் உள்ள செங்கோடன் என்பவரின் வீட்டுக்குள் சென்றுவிட்டார். இதை அதே பகுதியை சேர்ந்த விவசாயி பூபதி (42) என்பவர் பார்த்தார். 
கட்டையால் அடித்தார்
உடனே பூபதி வேலுச்சாமியிடம் சென்று, ஏன் இப்படி மதுபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் நுழைகிறாய் என்று தட்டிக்கேட்டார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பூபதி அங்கிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து வேலுச்சாமியின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வேலுச்சாமி படுகாயம் அடைந்தார். உடனே பூபதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 
வலைவீச்சு
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் வேலுச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று காலை வேலுச்சாமி இறந்துவிட்டார்.
 இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பூபதியை வலைவீசி தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட வேலுச்சாமிக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார். 

Next Story