4 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா


4 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 May 2021 7:52 PM GMT (Updated: 8 May 2021 7:52 PM GMT)

செந்துறையில் 4 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செந்துறை:

தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா
அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் 15 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 2 பேரை சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு சுகாதாரத்துறையினர் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஒருவரை அழைத்துச் செல்ல யாரும் வராததால் தீயணைப்பு நிலையத்திலேயே தங்கியிருந்தார். இதனால் அச்சமடைந்த சக தீயணைப்பு வீரர்கள் அவரிடம் இருந்து சற்று விலகி இருந்தனர்.
அச்சம்
மேலும் விடுமுறைக்கு சென்று திரும்பிய தீயணைப்பு வீரர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோர், பணிகளை செய்ய தயக்கம் காட்டி தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்குள் செல்லாமல் வெளியில் நின்றனர். மேலும் அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தீயணைப்பு வீரர், தீயணைப்பு நிலையத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றார். இந்நிலையில் மேலும் ஒரு தீயணைப்பு வீரருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. எனவே மொத்தம் 4 தீயணைப்பு வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேண்டுகோள்
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மேலதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மீதமுள்ளவர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story