தொப்பூர் அருகே கன்டெய்னர் லாரி மோதி 2 பேர் சாவு


தொப்பூர் அருகே கன்டெய்னர் லாரி மோதி 2 பேர் சாவு
x
தினத்தந்தி 9 May 2021 5:06 PM GMT (Updated: 9 May 2021 5:06 PM GMT)

தொப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி 2 வாலிபர்கள் இறந்தனர்.

நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி 2 வாலிபர்கள் இறந்தனர்.
2 பேர் பலி
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள முனியம்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). கோவை மாவட்டம் இடையர்பாளையம் நேரு வீதியை சேர்ந்தவர் சசிகுமார் (28). இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.
இந்த நிலையில் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி சென்றனர் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள தொம்பரகாம்பட்டி அய்யனாரப்பன் கோவில் அருகே நேற்று காலை மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சேலம் நோக்கி, அவர்களுக்கு பின்னால் வந்த கன்டெய்னர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில், சசிகுமார், ரமேஷ் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கன்டெய்னர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அவர்கள் 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். 
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story