12 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை


12 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 9 May 2021 5:17 PM GMT (Updated: 9 May 2021 5:17 PM GMT)

கோவையில் இதுவரை 12 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு 70 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

கோவை

கோவையில் இதுவரை 12 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு 70 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா 2-வது அலை தீவிரமாக உள்ளது. இதனால் கோவையில் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படுகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்கள் நோயாளிகளால் நிரம்புகின்றன. பல ஆஸ்பத்திரிகளில் காலி படுக்கைகள் இல்லாத நிலை உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை 12 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பரிசோதனை அதிகரிப்பு

கொரோனா வேகமாக பரவுவதால் பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 

இதில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்துவதன் மூலம் மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை 12 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்து உள்ளது. அடுத்த சில நாட்களில் தொற்று பாதிப்பு 1 லட்சத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

வெளியே வர வேண்டாம்

எனவே பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். தற்போது மாவட்டம் முழுவதும் 3,500 பேர் வீடுகளில் தனி மைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப் பட்டவர்களை சுகாதார துறையினர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தேவையான மருத்துவ ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் களில் 70 சதவீதம் பேர் தற்போது மாநகராட்சி பகுதியில் வசிக்கின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இது 58 சதவீதமாக இருந்தது. தற்போது மாநகராட்சி பகுதியில் பாதிப்பு சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆனால் சூலூர் பகுதியில் 10 சதவீதமாக உள்ளது. 

தடுப்பூசி

எனவே இந்த 2 பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோவையில் தற்போது 21 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 

இதன்மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 20 ஆயிரம் பேருக்கு கொரோ னா பரிசோதனை செய்ய முடியும். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story